சென்னை:-
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சித்துறை அமைச்சர்களுடன் நேற்றையதினம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனி அலுவலர் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு, கே.ஆர். பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர்.
கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக மசோதாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலமும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளது.