சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததையடுத்து கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.அப்போதே பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மே 24-ம் தேதி முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முற்றிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
அதன்பிறகு கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி முதலில் காய்கறி, மளிகை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 14-ம் தேதிக்கு பிறகு மேலும் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது வாகன பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்டவைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டன.பின்னர் ஒவ்வொரு வாரமும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்களும் திறக்கப்பட்டது. இவற்றில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் தளர்வுகள் அறிவிக்கப்படும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அவர்கள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் குறிப்பிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் டவுன் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று அதிகமாக இருந்ததால் அங்கு ஒருசில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.
ஏற்கனவே அறிவித்த தளர்வுகள் அடிப்படையில் தற்போது நகை, ஜவுளிக்கடை, மால்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டன. நகை, ஜவுளிக்கடைகளையும் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 4.6 சதவீதத்துக்கும் கீழ் தற்போது தொற்று உள்ளது.
தற்போது 27-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நோய் தொற்று மிகவும் குறைந்துள்ளதால் ஊரடங்கை முற்றிலும் விலக்கி கொள்ளலாமா…???? அல்லது மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க செய்யலாமா…???? என்று அரசு ஆலோசித்து வருகிறது.ஊரடங்கு நீட்டிப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருவதால் அடுத்து என்ன செய்யலாம்..??? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் சில பரிந்துரைகளை செய்துள்ளனர்.
அதனடிப்படையில் இன்று மருத்துவக் குழுவுடன் ஆய்வு நடத்தப்பட்டது. 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு குறைந்த மற்ற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மீதம் உள்ள 23 மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.போக்குவரத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன. சில இடங்களுக்கு இ-பாஸ், இ-பதிவு மூலமே செல்ல வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இதிலும் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.இதன் காரணமாக 23 மாவட்டங்களில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வெளியூர் பஸ்களும் சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளை மட்டும் திறக்கலாமா..??? என்றும் ஆலோசனை நடத்தினார்கள். எனவே இந்த கடைகளுக்கும் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும் கொரோனா மேலும் அதிகரித்து விடாமல் தடுப்பதற்கு பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதனடிப்படையில் சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.