சென்னை:-
சென்னையில் பிச்சைக்காரர்களை குறிவைத்து தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கண்ணம்மாள் (75) என்பவர் பிச்சையெடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு பைக்கில் வந்த 2 பேர் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த கண்ணம்மாளை தாக்கி, அவர் வைத்திருந்த 70 ரூபாயை பறித்து சென்றனர். அருகில் இருந்த மற்றொரு யாசகரான சங்கரன் (65) என்பவரையும் தாக்கி 50 ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், ராயப்பேட்டையை சேர்ந்த சுலைமான் (23) என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து பணம் பறித்தது தெரியவந்தது.
பொதுமக்களிடம் வழிப்பறி செய்தால் போலீசில் சிக்கி விடுவோம் என்பதால், இவன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் சாலையோரம் வசிக்கும் யாசகர்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான்.
மேலும், யாசகர்கள் அளிக்கும் புகாரை போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள் என திட்டமிட்டு அவர்களை தாக்கி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான் இந்த பிச்சைகார கொள்ளையன். இவன் கொள்ளையடிக்கும் பணத்தில் தனது நண்பர்களான தனபாலன் (20), சக்திவேல் (21) ஆகியோருடன் கஞ்சா மற்றும் மது என சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளான். இதையடுத்து, சுலைமான் மற்றும் அவரது கூட்டாளிகள் தனபாலன், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.