கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 11-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், ஆசிரியர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்த தனியார் பள்ளியில் . பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும்’ இதனால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அதோடு மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும், பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் செய்தி வெளியிட்டன. அப்போது மாணவியின் பெயர், அவர் வசித்து வந்த இடம் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன.
போக்சோ சட்டத்தின் கீழ், 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும்போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.