புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டும் என, மின்வாரிய ஊழியர்களுக்கு விநியோக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நுகர்வோரின் குறைகளுக்கு 3 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. நுகர்வோரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்பெட்டிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.