அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வித் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-22ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் மத்திய அரசின் தேசிய கல்வி தொகை இணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.
பள்ளி படிப்பு கல்வி உதவித் திட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்வி நிறுவனத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஆதார் விவரங்களை இணைத்து பின்னரே இணையத்தில் சரி பார்க்க இயலும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.