கோவையில் மென் பொறியாளர் ஒருவர் வீட்டின் உள்ளே எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் .42 வயதுடைய இவர் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியை பிரிந்து வீட்டில் தனியே வசித்து வரும் இவர், கடந்த சனிக்கிழமை உடல் அழுகி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே வீடு பூட்டப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் சடலத்திற்கு அருகே சாக்குப்பை கிடந்ததால், மர்ம நபர்கள் இவரை கொலை செய்து வெளியே எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கலாம்.ஆனால் வெளியே ஆள் நடமாட்டம் இருப்பதால் வீட்டின் உள்ளேயே வைத்து எரித்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.