டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் அறுவடை நடந்து வருகிறது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல் அறுவடையும் நடக்கிறது. ஆங்காங்கே மழை பெய்து வருவதால், அறுவடை செய்த நெல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதை, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, ஆன்லைனில் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, https:/tncsc-edpc-in என்ற இணையதள முகவரியை விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டும். தங்கள் மொபைல்போன் எண்ணை பயன்படுத்தி ரகசிய குறியீட்டு எண்ணை பெற வேண்டும்.
அதன்பின் உள் நுழைந்து, தங்களது பெயர், ஆதார் எண், சாகுபடி செய்த நிலப்பரப்பு, மாவட்டம், கிராமம், எதிர்பார்க்கப்படும் மகசூல், கொள்முதல் தேதி, மொபைல் போன் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.இதையடுத்து, குறிப்பிட்ட நாளில் நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, சம்மந்தப்பட்ட விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்யப்படும். அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.