சென்னை:-
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதே மருத்துவமனையில்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக. எம்எல்ஏ பழனி, அவருடைய மனைவி, மகள் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்ற தகவல் வெளியானது.
இது தொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்:-
எனக்கு கொரோனா என்று வெளியான செய்தி வதந்தி, நான் முழு உடல்நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.