கொரோனா காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், டிஜிட்டல் வழிக்கல்வியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE)-ன் படி, 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வியை, சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்திலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி, டி.வி மற்றும் ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ-வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, திக்ஷா (ஆன்லைன்), ஸ்வயம் (ஆன்லைன்), ஸ்வயம் பிரபா (டி.வி), தூர்தர்ஷனின் இதர சேனல்கள், அகில இந்திய ரேடியோ நெட்வொர்க்குகள் மூலம் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது.
மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியைத் தொடர்ந்து வழங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய பிரக்யதா வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காக, டி.வி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றலுக்கு தீர்வு காண மாற்றுக் கல்வி அட்டவணை உருவாக்கப்பட்டது.
மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் செல்லுதல், சமுதாய வகுப்பறைகள், இலவச போன் எண்கள், எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டுகோள் விடுத்து ஆடியோ மூலம் கல்வியைப் பெறுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ‘இந்திய டிஜிட்டல் கல்வி – ஜூன் 2020’ ஆய்வறிக்கையின் படி,
டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் சிறப்பாகப் பங்காற்றினாலும் மிசோரம், திரிபுரா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.