காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த துப்பாக்கி கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் பகுதியில் நேற்று பணிக்கு சென்ற இந்திரா என்ற பெண்ணிடம் 2 வடமாநில வாலிபர்கள் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். அவர்களை துரத்தி பிடிக்க சென்ற பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக உடனடியாக அருகேயுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி, டி.ஐ.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் விட்டுசென்ற 2 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்று காட்டுக்குள் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தேடி வந்தனர்.
இந்த தேடுதல் வேட்டைக்காக காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த துப்பாக்கி கொள்ளையர்கள் இருவரில் ஒருவன் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.