சென்னை டிபி சத்திரம் கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரை துரிதமாக செயல்பட்டு தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பற்றிய காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் கடந்த 5 நாட்களாக கனமழை வெளுத்தது வாங்கி வருகிறது.
மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே , கனமழையுடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுந்து வருகிறது.
இந்நிலையில், கீழ்பாக்கம் டி.பி.சத்திரம் கல்லறை தோட்டத்தில் முறிந்து விழுந்த மரத்தின் அருகில் ஒருவர் மயங்கி கிடந்தார். மரம் முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி இறந்து விட்டதாக கருதப்பட்ட இளைஞரை தனது தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால் அந்த நபர் உயிர்பிழைத்தார். கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரை தனது தோளில் வைத்து காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், ஆய்வாளர் ராஜேஸ்வரி பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.
இதனிடையே, கல்லறையில் மயங்கி கிடந்த இளைஞரின் பெயர் உதயா என்றும் அவர் அதே கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வருபவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கனமழை காரணமாக உதயா கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்துள்ளார். ஆனால் கனமழை தொடர்ந்ததால் உதயாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி கிடந்துள்ளார்.