உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி அகழாய்வு தளத்தில் குழிகளை பார்க்க நேற்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பபட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில் கீழடியில் சிறப்பு கண்காட்சி மற்றும் தமிழர்களின் சிறப்பு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று(திங்கட்கிழமை ) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் கீழடி, கொந்தகையில் அகழாய்வு குழிகளை பார்வையாளர்கள் பார்க்க சிறப்பு அனுமதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட கலைபொருட்களும் , பழமை வாய்ந்த இசைக்கருவிகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழமையான இசைக்கருவிகளை இசைப் பள்ளி ஆசிரியர் ஆண்ட்ரூஸ் பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.
இந்த சிறப்பு கண்காட்சியை காண மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்த கண்காட்சிகளை பார்த்துச் செல்கின்றனர்.