அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு பரவலாக அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி வேலை வாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை வழங்க 30சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். அதன்பிறகு பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுக்காக 25 வருடங்களாக நடந்த போராட்டத்திற்கான வெற்றி என பெண்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பிற்கு அரசுத் தேர்விற்குத் தயாராகி வரும் ஆண்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார். தற்போது உள்ள 30 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடந்தும் பெண்கள் பணியைப் பெறுகின்றனர். பெண்களால் தங்களது 30 சதவீத இட ஒதுக்கீட்டையும் கடந்து பொதுப் பிரிவில் உள்ள 70சதவீத இடங்களுக்கும் போட்டியிட முடிகிறது. பெண்கள் தரவரிசையில் அதிக இடங்களைப் பெறும்பொழுது அவர்களுக்கு வழங்கப்படும் 30% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து 60சதவீதம் வரைக் கூடுதலாக இடங்களைப் பெறுகின்றனர்.
இதற்கு உதாரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்2 தேர்வில் 1334 இடங்களில் 30 சதவீதமான 400 இடங்களுக்குப் பதிலாக 716 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்1 தேர்வில் 65சதவீதம் பெண்களும், 35சதவீதம் ஆண்களும் பணியில் நியமிக்கப்பட்படுள்ளனர் என்றும் , இதே நடைமுறைதான் குரூப்4 மற்றும் இதர தேர்வுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 30% இட ஒதுக்கீட்டிலே பெண்களுக்கு 60% வரை பணி வழங்கப்படும் நிலையில் 10% அதிகரித்தால் 65-75 சதவீத இடங்கள் பெண்களுக்கே கிடைக்கும், ஆண்களுக்கு 25-30 சதவீத பணியிடங்களே வழங்கப்படும். எனவே இந்த இட ஒதுக்கீட்டு முறையில் 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில், ராஜஸ்தான் பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக, ராஜேஷ்குமார் தாரியா தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் ஆண்-பெண் சமத்துவத்தை நிலை நாட்ட 50-50 சதவீத இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மேலும் தமிழக அமைச்சரவையில் முதலில் இந்த 40% இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். ஆளும்கட்சியின் 173 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள், அவர்களில் வெற்றிபெற்ற 6 பேரில் 2 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கியிருப்பது இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் வகையில் #JusticeForMenInTNPSC என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு தங்களது கோரிக்கைகளை தபாலிலும், மின்னஞ்சலிலும், ட்விட்டர் மற்றும் வலைத்தளத்தின் மூலமாகவும் அனுப்பி வருகின்றனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்