ஒட்டாவா:-
கனடாவின் வடக்கு பகுதியில் உள்ள நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவன் போலீசார் போல் உடையணிந்து கொண்டு திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளான். வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் 16 பேர் பலியான சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
கனடாவில் கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற கொடூரமான தாக்குதல் நிகழ்ந்ததில்லை. கடந்த 1989-ல் மாண்ட்ரல் பொறியியல் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பெண்கள் பலியானதையடுத்து, அந்த நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.
தற்போதை தாக்குதல் சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (Heidi Stevenson) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டன. இதன் பின்னர் நோவா ஸ்காட்டியா நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.
போலீசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது.
இவன் நோவா ஸ்காட்டியா பகுதியில் பல் மருத்துவமனை (Denture Clinic) ஒன்று நடத்தி வருகிறான் என்பது தெரியவந்துள்ளது. அவனும் உயிரிழந்துவிட்டான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு வீடுகளுக்கு தீயும் வைத்துள்ளான். இந்தத் தாக்குதல் அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாதது. போர்ட்டாபிக் (Portapique) என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடல்கள் சிதறிக் கிடந்தன. இந்த ஊர் ஹாலிபாக்ஸ் நகருக்கு 100 கிமீ தொலைவில் உள்ளது.
முதலில் தன் விரோதியை இலக்கு வைத்து பிறகு கண்மூடித்தனமாக சுட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக போலீஸார் குடியிருப்பு வாசிகளை கதவுகளைப் பூட்டிக் கொண்டு இருக்குமாறு எச்சரித்தனர். இப்பகுதியில் பல வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தி தானும் மாண்ட அந்த நபர் பகுதி நேரமாக போர்டபிக்கில் வாழ்பவன் என்று தெரியவந்துள்ளது. போலீஸார் போல் சீருடை அணிந்து போலீஸார் பயன்படுத்தும் ராயல் கனடியன் போலீஸ் வாகனம் போன்ற ஒன்றில் வந்துள்ளான்.
அமெரிக்காவை போல் அல்லாமல் மக்களை கொன்றழிக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் கனடாவில் மிகவும் அரிதானது. கனடாவில் பதிவு செய்யாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் கனடாவில் நடந்த மோசமான தாக்குதல்கள் 2017ம் ஆண்டு கியூபெக் நகரில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்த ஆறு பேரை சுட்டுக்கொன்றான்.
2018 ஆம் ஆண்டு மர்ம நபர் ஒருவன் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது தாறுமாறாக வாகனத்தை மோதி 10 நபர்களை கொன்றான்.