உலகமே கொரோன அச்சுறுத்தலில் இருக்கும்போது சில ஆப்பிரிக்க நாட்டு மக்கள் முப்புறமும் இயற்கையான தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உணவு தானியங்களை அழித்ததால் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத இழப்பு ஏற்படும் என்றும், வரும் காலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ள நிலையில், சில நாடுகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. மற்றொரு புறம் கொரோனா பரவல் காரணமாக உலகில் 5ல் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதே போல இந்தியாவிலும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பலத்த அழிவை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் பாகிஸ்தானில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய இவை தற்போது ராஜஸ்தானின் பல பகுதிகளில் அழிவை ஏற்படுத்தி பயிர்கள் மற்றும் மரங்களை அழித்த பின்னர், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் தொகுதியான செஹூரில் புத்னியில் நுழைந்துள்ளது. இது அம்மாநிலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவு இது தற்போது பெரிய சவாலாக முன்னெழுந்துள்ளது.
ம.பி. மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தின் வழியாக நுழைந்த வெட்டுக்கிளி பூச்சிகள், பின்னர் மால்வா நிமரின் சில பகுதிகளுக்குச் சென்று இப்போது போபாலுக்கு அருகில் உள்ளன.
இந்த பாலைவன வெட்டுக்கிளியின் படையெடுப்பானது மழைக்காலம் வரை தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.