சிட்னி:-
இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது.
டிக்டாக் சீன அரசால் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு வருவதாக லிபரல் கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜிம் மோலன் (Jim Molan) குற்றம் சாட்டியுள்ளார். அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செயலியை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.
இதேபோல தொழிலாளர் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் ஜென்னி மெக் அலிஸ்டர் (Jenny McAllister) இது போன்ற செயலிகளில் வெளிநாடுகளில் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற செயல்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
இவர்களைத் தவிர மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீன நாட்டு செயலிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கல்வான் மோதலையடுத்து, சீன தயாரிப்புகளுக்கு மத்திய அரசு படிப்படியாக தடை விதித்து வருகிறது. சீன நிறுவனங்களுக்கு சொந்தமான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த செயலிகளுக்கு தடை விதித்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இதைத் தவிர ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட 89 செயலிகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறினார். இதற்காக பரிசீலனை நடைபெற்று வருவதாக அதிபர் ட்ரம்ப்பும் உறுதி செய்திருந்தார்.
தற்போது இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக் செயலிக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. பாதுகாப்பு அச்சம் காரணமாக டிக்டாக்கை தடை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பயனர்களின் தரவுகளை சேகரிக்க சீன அரசு இதனை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் செயலியை பயன்படுத்தி சீன அரசு உளவு பார்ப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் பயனர்களின் தகவல்களை சீனா உள்ளிட்ட எந்த நாடுகளுக்கும் பகிரவில்லை என டிக்டாக் விளக்கமளித்திருந்தது.
ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. முன்னதாக, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிக் டாக்-க்கு இந்தியா தடை விதித்ததால் அதன் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் நிறுவனத்திற்கு 6 மில்லியன் டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.