தெஹ்ரான்:-
ஈரான் நாட்டில் 14 வயதான ரோமினா அஷ்ரப்பின் என்ற சிறுமி அவரை விட 21 வயது மூத்த 35 வயது இளைஞர் பாஹம்ன் காவாரி (Bahamn Khavari) என்பவனை காதலித்து வந்துள்ளார். (அந்த இளைஞருக்கு 29 வயது என்று வேறு ஒரு தகவல் உலா வருகிறது).
இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அதனால் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனால் ரோமினா அஷ்ரப்பின் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மரணம் ஈரானில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வட-மேற்கு பகுதியில் கிலன் (Gilan) மாகாணத்தில் தலேஷ் கவுண்டியில் (Talesh County) இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.
இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டுள்ளார். ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டால் ஈரானின் சட்டவிதிப்படி அவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தற்போது இந்த மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். ரோனிவின் மரணத்துக்கு நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சமூக வலைதளங்களில் பலரும் #RominaAshrafi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆணவ கொலைத் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆர்டிக்கிள் 302-ல் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் சட்டத்தின்படி 13 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திருமணம் செய்துகொள்ளலாம். எனினும் ஈரான் பெண்கள் சராசரியாக 23 வயதில் தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஈரானில் பல குடும்பங்கள் தங்களது குடும்ப கவுரவம் பாரம்பரியம் கருதி காதலில் விழும் இளம்பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகிறார்கள். எனவே இதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.