அபுதாபி:-
பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை இருக்கா, இல்லையா என்பதை கண்டறியும் முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது. சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படும்.
அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும்.
பச்சை நிறம் ஒளிர்ந்தால் கொரோனா இல்லை என்றும் சிவப்பு நிறம் ஒளிர்ந்தால் கொரோனா உள்ளது என்றும் அர்த்தமாகும். இதனை அடுத்து சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும்.
இது குறித்து அபுதாபி சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் ஜமால் முகம்மது அல் காபி கூறியதாவது:-
அபுதாபி அரசு சார்பில் புதிதாக மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்வதை வைத்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90.3 சதவீதம் தொற்றுடையவர்களிடம் இருந்து மிகத்துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது. அதேபோல் தொற்று இல்லாதவர்களை கண்டுணரும் சோதனையில் 83 சதவீத துல்லிய முடிவுகள் பெறப்பட்டது.
இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்பவதால் ஒருவரின் உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும்.
அபுதாபியில் உள்ள வணிக வளாகங்கள், பொது மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், ஒரு சில குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகள் ஆகியவற்றில் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார்.