கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 22-ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது
ஊரடங்கை ஒட்டி ரயில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன .முக்கிய சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை. தேசிய ஊரடங்கு காரணமாக நேற்று நடைபெற இருந்த பல்வேறு திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன .சில திருமணங்கள் குறிப்பிட்ட நபர்களோடு நடைபெற்று முடிந்தன.
இந்த நிலையில் தேமுதிக நிர்வாகி விமல் என்பவருக்கும் கமலி என்பவருக்கும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் தேசிய ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டும் என்கின்ற காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக நிர்வாகி விமலின் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் மற்றும் சில தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பங்கேற்றனர்.
இந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர் .திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்துகொள்ள சானிடைசர் வைக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதேவேளையில் மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில் தனது இல்லத்தில் திருமணம் நடைபெற்றதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.