நியூயார்க் :
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக, அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது, என வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொது சபையில், சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில், நேற்று சிறப்பு கூட்டம் ஒன்று நடந்தது. “வீடியோ கான்பரன்ஸ்” மூலமாக நடந்த இந்த கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா பேசினார்.
அதில், “தேசிய பாதுகாப்பிற்கு அணு ஆயுதங்கள் முக்கியம் என்று சில நாடுகள் எண்ணுகின்றன. இதனால், துரதிர்ஷ்டவசமாக, அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. படிப்படியான சில செயல்முறை வாயிலாக, அணு ஆயுதக் குறைப்பு என்ற இலக்கை அடைய முடியும் என இந்தியா நம்புகிறது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுடன், அர்த்தமுள்ள பேச்சு நடத்தினால், உடன்பாடு ஏற்படும் என, முழுமையாக நம்புகிறோம்.அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக, அணு ஆயுதங்களை இந்தியா எப்போதும் முதலில் பயன்படுத்தாது. அதேபோல், அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு எதிராகவும், அணு ஆயுதங்களை என்றும் பயன்படுத்தமாட்டோம். இந்த கொள்கைகளையும், இந்தியா என்றும் கடைப்பிடிக்கும்.
கடந்த 1982 முதல், ஒவ்வொரு ஆண்டும் பொது சபையில் தாக்கல் செய்யப்படும் வருடாந்திர தீர்மானத்தில், ‘அணு ஆயுத பயன்பாடு, மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல் என்றும், ஐ.நா.வின் விதிகளை மீறும் செயல் என்றும்’, இந்தியா தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது.
இந்தியாவின் இத்தகைய தீர்மானத்திற்கு, பெரும்பாலான நாடுகள் முழுவதுமாக ஆதரவினை அளித்து வருகின்றன. அணு ஆயுதங்களை குறைக்கவும், அதன் பெருக்கத்தை தடுக்கவும், இதர நாடுகளுடன் இணைந்து பணியாற்ற, இந்தியா தயாராக உள்ளது.என்று அவர் பேசினார்.