வாஷிங்டன்:-
கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகம் முழுதும் சுமார் 173 நாடுகளில் 14, 461 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 336,000 பேருக்கு தொற்று பரவியுள்ளது என கொரோனா பயவலை கண்காணித்து வரும் ஜான்ஸ் ஹாப்கின் (Johns Hopkins) அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய மற்றும் தகுந்த ஆவணங்களின்றி இந்தியர்கள் உட்பட யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை கிடையாது என்று யாரும் மறுக்கவில்லையே, அவர்களுக்கும் பரிசோதனை உண்டு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் மக்கள் ஆவணங்களின்றி சட்ட விரோதமாகத் தங்கியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது:-
அவர்களுக்கும்தான் (சட்ட விரோத குடியேறிகள்) கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அவர்களை அவர்கள் நாட்டுக்கோ அல்லது வேறு எங்கோ அனுப்ப விரும்பவில்லை. தாங்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைக்குச் செல்லும் போது அமெரிக்க குடியேற்றத்துறையால் சட்ட விரோத குடியேறி என்று தெரிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் பல குடியேறிகள் டெஸ்ட் எடுத்துக் கொள்ள அச்சப்படுவதாக எழுந்த செய்திகளை அடுத்து ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து அமெரிக்க மருத்துவ ஜெனரல் ஜெரோம் ஆடம்ஸ் கூறுகையில்:-
இந்த வைரஸிற்கு அமெரிக்கர் யார்? சட்டவிரோத குடியேறிகள் யார் ? வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லது உள்நாட்டினரா ? என்றெல்லாம் தெரியாது. மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எனவே கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இது நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய நன்மை.
வேர்ல்டோ மீட்டர் (Worldometer) இணையதள தரவின் படி அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,000 ஆக அதிகரிக்க 419 பேர் பலியாகியுள்ளனர்.