விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில் வட அமெரிக்க தமிழ் சங்கத்திற்கு 60 திருவள்ளுவர் சிலைகள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜிபி குழும தலைவர் விஜி. சந்தோஷம் ,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி , கவிப்பேரரசு வைரமுத்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி மற்றும் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஜிபி குழும தலைவர் விஜி. சந்தோஷம், “ஏற்கனவே உலகம் முழுவதும் 62 வள்ளுவர் சிலைகளை நாம் நிறுவி விட்டோம். தற்போது அமெரிக்காவுக்கு ஒட்டு மொத்தமாக 60 வள்ளுவர் சிலையை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மே மாதத்தில் டெல்லியில் உள்ள ஏழு தமிழ் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அமைக்கவுள்ளோம் . இந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திருக்குறள் அதிகாரங்கள் 133 ஐ கருத்தில் கொண்டு 133 திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
கவிஞர் சொல் பொய்க்காது என்பார்கள் அதுபோல ‘வி.ஜி.பி’ உலக தமிழ் சங்க வெள்ளி விழாவில் கவியரசர் வைரமுத்து அவர்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் 133 திருவள்ளுவர் சிலைகள் வைக்க வேண்டும் என்று வாழ்த்தினார். அவருடைய வார்த்தைகளின் படி 133 திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று 133 வது திருவள்ளுவர் சிலை எம் ஜி ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைக்கப்படும் என்றார்.
மேலும் நாம் அனுப்பும் 60 சிலைகளில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜோ. பைடன் அவர்களுக்கும் மற்றறொரு சிலை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த கால்டுவெல் வேல்நம்பியிடம் கூறியுள்ளேன். திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதன் மூலம் திருக்குறளின் சிறப்பு, தமிழ் மொழியின் மாண்பு உலக மக்கள் யாவரும் அறிய சிறந்ததாக வழியாக இருக்கும் என நம்புகிறேன் “எனக் கூறினார்.