அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்காமல் இருந்தால் 6 நாட்கள் எக்ஸ்டிரா விடுமுறை
டோக்கியோவைச் சேர்ந்த பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்காமல் இருந்தால் தங்கள் ஊழியர்களுக்கு 6 நாட்கள் எக்ஸ்டிரா விடுமுறை தருவதாக அறிவித்த செய்தி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜப்பான் டோக்கியோவில் பியாலா இன்க் என்ற மார்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 29வது மாடியில் செயல்பட்டு வருவதால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்க விரும்பும் ஊழியர்கள் தரைத்தளத்திற்கு தான் வர வேண்டும். இதனால் கால விரயம் மற்றும் செலவு தான் அதிகரிக்கிறது. இப்படி நேரத்தை வீணாக்குவது அந்நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. முதலில் அந்நிறுவனம் சிகரெட் பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்குமிடையில் கடும் சண்டை ஏற்பட்டது. இதுபோன்ற தங்கள் சொந்த விவகாரத்தில் நிர்வாக தலையிட கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குச் சென்றது. சம்பவத்தை கேள்விப்பட்ட அவர் ஒரு வித்தியாசமான சலுகையை ஊழியர்களுக்கு அறிவித்தார். அதன்படி அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்காமல் இருந்தால் ஊழியர்களுக்கு 6 நாட்கள் எக்ஸ்டிரா விடுமுறை தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் சிகரெட் பிடிக்கும் ஊழியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் பலர் அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடத் துவங்கினர். வித்தியாசமான நடைமுறையை அமல்படுத்திய செய்தி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது