பியாங்யோங்:-
கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவிற்கு அடுத்தபடியாக வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்று தென்கொரியாவும். இவை இரண்டும் வடகொரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும், உலகின் பல வளர்ந்த நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என வடகொரியா கூறியுள்ளது.
பொதுவாகவே வெளி உலகுடன் எந்தவிதமான தொடர்பும் கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவரும் நாடு வடகொரியா. இங்கு பயணம் செய்யக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் சொற்பமே.
இந்த நிலையில், வெளியுலகுடனான தொடர்பை துண்டித்ததால் தங்கள் நாடு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வடகொரியா கூறியுள்ளது.
அதற்கு காரணம் தங்கள் நாட்டு எல்லைகளை கடந்த ஜனவரியில் இருந்தே முழுமையாக அடைத்து விட்டதாகவும், அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவைகளை முற்றிலும் தடை செய்துவிட்டதாகவும் வடகொரியா சொல்கிறது.
நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் நாட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் தொலைத்து கட்டிவிடுவேன் எனக் கூறியதால் அதிகாரிகள் மிகுந்த மிகமிகக் கவனத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும், மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன.
வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து எதுவும் பேசவில்லை. இதனால் உண்மை நிலை என்னவென்று உலக மக்களுக்குத் தெரியவில்லை.
வடகொரியாவில் கட்டாயம் இந்த வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவின் கொரியாவிற்கான ராணுவ கமாண்டர் ஜெனரல் ராபர்ட் அப்ரம்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் வடகொரியா இவ்வாறு உலக நாடுகளிலிருந்து தனிமை படாமல் இருந்தால் பெரும் இழப்புகளை சந்தித்து இருக்கும். ஏனெனில் வடகொரியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு திறன் உள்ளவர்கள். எனவே கொரோனா பரவினால் ஆசியாவிலேயே அதிக மக்கள் உயிரிழந்த நாடாக வடகொரியா திகழும் என்றார்.