ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 250 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கிட்டத்தட்ட 250 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் முற்றிலும் அழிந்ததாகவும், பேரழிவு நிகழ்ந்த அந்த மாகாணங்களுக்கு அனைத்து உதவி நிறுவனங்களையும் உடனடியாக அனுப்ப குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தலீபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், நில அதிர்வு உணரப்பட்டது. பூகம்பத்தின் அதிர்வுகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியா முழுவதும் 500 கிமீ தொலைவில் உணர்ந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.