சியோல்:
அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாம்சங் துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனம் சாம்சங். 1938-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தென்கொரியாவின் டெங்கோ பகுதியில் லி நுங் செல் இந்த நிறுவனத்தை துவங்கினார். ஆரம்பத்தில் டிரக்குகளில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழிலாக இருந்த சாம்சங் குழுமம் அடுத்த 60 ஆண்டுகளில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து உலகையே கலக்கியது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு நிகராக தற்போது சாம்சங் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு மூன்று தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. லியின் மகன் லி கொன் ஹி 1987-ல் சாம்சங் தலைவராகப் பொறுப்பேற்றார். 2008 வரை அவர் தலைவர் பதவியில் நீடித்தார். அந்த காலகட்டத்தில் டிவி, சாம்சங் வீடியோ பிளேயர், ஆடியோ சவுண்ட் சிஸ்டம், செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் விற்பனையில் சாம்சங் நிறுவனம் சாதிக்கத் துவங்கியது.
2009, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுத்துக்கொண்ட லீ, பின்னர் 2011 முதல் 2020ல் தனது மறைவு வரை தலைவர் பதவியில் நீடித்தார். தந்தையின் மறைவை அடுத்து மூன்றாவது தலைமுறையாக அவரது மகன் ஜே ஒய் லீ துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். தாத்தா மற்றும் அப்பா போல இவரும் சாம்சங் நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று தொழில் முன்னேற்றம் காண முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இவர்மீது லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவருக்கு சியோல் உயர்நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதிக்குமா???? என்று தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து ஜே ஒய் லீ நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 52 வயதான ஜே ஒய் லீ, 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை விசாரித்த சியோல் உயர் நீதிமன்ற நீதிபதி ஜாங் சின் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை விதித்துள்ளார்.
ஜே ஒய் லீ கைதான பின்னர் சாம்சங் நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் அடுத்து யார் கவனிப்பார்கள்???? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக அளவில் மின்னணு தொழில்நுட்ப துறையில் சாதித்துவரும் சாம்சங் நிறுவனம் இவரது கைதால் தற்போது பின்னடைவை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.