அஸ்காபாத் :
துருக்மெனிஸ்தான் நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாடி வருகின்றனர். அங்கு பத்திரிகை சுதந்திரம் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் அந்நாட்டின் அதிபர் நாய் ஒன்றின் 19 அடி தங்க சிலையை திறந்து வைத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்மெனிஸ்தான் அதிபர், நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த நாய் சிலையின் உயரம் 19 அடி ஆகும். இது “அலாபை” எனும் இனத்தை சேர்ந்த நாய், துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலிக்கு விருப்பமான நாய் இனம் இதுதானாம்.
மத்திய ஆசியாவில் மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.அந்நாட்டின் அதிபரால் அந்நாயின் இனம் அங்கீகரிக்கப்படுவது, கொண்டாடப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை அர்ப்பணித்துள்ளார் குர்பங்குலி.
இந்த தங்க நாய் சிலையானது, துருக்மெனிஸ்தான் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அந்த தங்க நாயின் சிலையைச் சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைக்க உண்டான செலவு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அந்நாட்டின் அரசு ஊடகம், இந்த நாய் சிலையானது நாட்டின் தன்னம்பிக்கையையும், பெருமையையும் வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.இச்சிலை திறந்துவைக்கப்பட்ட பொழுது ஒரு சிறுவனுக்கும் இந்த அலாபை இன நாய் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘அகல்தெக’ எனும் பந்தயக் குதிரையும் வழங்கப்பட்டது.
அகல்தெக குதிரை இனத்தின் மீதும் பெரும் காதல் கொண்டவர் அந்நாட்டின் அதிபர். 2015ஆம் ஆண்டு துருக்மெனிஸ்தான் அதிபர் இந்த குதிரையை ஓட்டுவது போல தங்க சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.