கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், முதல் அறிகுறியாக இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவை கூறப்பட்டது.
பின்னர் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் பலர் தங்களது வாசனை நுகரும் திறன் மற்றும் சுவை உணரும் திறன் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர் இவையும் அறிவுரைகளை கருதப்பட்டது. ஆனால், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவி வருகிறது.
கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா ஏற்படும் பலருக்கு அறிகுறியே இல்லை. இதேபோல் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது.
அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் நாட்டிலும் 50% பேர் கொரோனா அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் கூட சில நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின்னர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது.
சமீபத்தில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டெல்லியில் இருந்து ஊரடங்கிற்கு முன்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அந்த மாணவி, பாதுகாப்பு நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த மார்ச் 17-ம் தேதியன்று கேரளா வந்த அந்த மாணவிக்கு 19 நாட்கள் கண்காணிப்பிற்குப் பின்னர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவருக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் தென்படாத சூழலில்,அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. பொதுவாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் துவங்கும் என்பதைக் கொண்டே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் 19 நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள். அந்த வைரஸுக்கு முடிவுகட்ட மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் மனித உடலில் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையே இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.