கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2 வாரத்திற்கும் மேலாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டின் டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) கப்பலில் இந்தியர்கள் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோக்கியோ:-
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 138 இந்தியர்களும் சிக்கித் தவிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகவலை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரும் உறுதி செய்துள்ளனர்.
சீனாவுக்குப் பிறகு ஜப்பானில்தான் வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை (89 பேர்) அதிகளவில் உள்ளது (ஆனால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை).
கடந்த 2 வாரத்திற்கு முன் ஹாங்காங்கில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஜப்பான் நோக்கி வந்தது. இந்த கப்பலில் 57 நாடுகளைச் சேர்ந்த 2700 பயணிகளும் சுமார் 1000 கப்பல் ஊழியர்களும் பயணம் செய்தனர். முன்னதாக, இக்கப்பல் கடந்த மாதம் 20ம் தேதி ஜப்பானில் இருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25ம் தேதி வந்தடைந்தது.
அப்போது அதில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியானது.
இதைத் தொடர்ந்து, யோகோஹமா துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் தினசரி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 63 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் 28 பேர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகள், மாஸ்க் ஆகியவை அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கப்பலில் 6 இந்தியர்கள் மட்டுமே இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 138 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 132 பேர் ஊழியர்களாக பணிபுரிபவர்கள் ஆவர். அவர்களும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் கப்பலிலேயே சிக்கி உள்ளனர்.
இதுவரை இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளுக்காக கப்பல் நேற்று முன்தினம் சில கிமீ தூரம் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு 24 மணி நேரம் கப்பல் நிறுத்தப்பட்டு மீண்டும் யோகோஹமா துறைமுகத்திற்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.