வாஷிங்டன்:-
கடந்த வாரம் புளோரிடாவில் அமெரிக்க அதிபரை சந்தித்து பேசிய பிரேசில் அதிபரின் தகவல் தொடர்புச் செயலாளர் ஃபேபியோ வாஜ்கார்டன்-க்கு (Fábio Wajngarten) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் ஜேர் பால்சொனேரோ (Jair Bolsonaro) கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
அதிபர் ஜேர் பால்சொனேரோ-ன் அவரது தகவல் தொடர்புச் செயலாளர் ஃபேபியோ வாஜ்கார்டனும் சென்றிருந்தார்.
இந்நிலையில் பிரேசில் திரும்பி ஃபேபியோவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கப் பயணத்தின்போது ஃபேபியோ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்துப் பேசினார், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஃபேபியோவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பிரேசில் அதிபர் ஜேர் பால்சொனேரோவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அவரது மகன் எடுவர்டோ பால்சொனாரோ (Eduardo Bolsonaro) தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் எந்த பரிசோதனை செய்து கொள்ள போவதில்லை என்றும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள போவதில்லை என்றும் கூறியுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் ஸ்டெஃபானி கிரிஷம் (Stephanie Grisham) கூறியுள்ளார்.