விஸ்கான்சின்:
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாக்கி என்ற நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் வணிக வளாகத்தை 75க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வணிக வளாகத்திற்குள் இருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு 20 முதல் 30 வயது இருக்கும், எனத் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.