கொல்கத்தா:-
மேற்கு வங்க மாநிலத்தில், அமலில் உள்ள ஊரடங்கை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு வரும் ஜூலை மாதம் 1-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன், வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது:-
50 சதவீத இருக்கை வசதிகளுடன், சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
50 சதவீத நபர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி. மேலும், உடற்பயிற்சி மையங்கள் காலை 6 -10, மாலை 4 – 8 வரை இயங்கலாம்.
தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், 50 சதவீத ஊழியர்களுடன், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் ரயில்கள் இயக்க தொடர்ந்து தடை போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.