சாதனையாளர்கள்

‘உவமைக் கவிஞர்’ சுரதா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘உவமைக் கவிஞர்’ சுரதா

தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘சுப்புரத்தினதாசன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதன் சுருக்கமான ‘சுரதா’ என்ற பெயரில் இலக்கியப் படைப்பாளியாக பரிணமித்தார்.

செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் ‘உவமைக் கவிஞர்’ என போற்றப்பட்டார். பாரதி தாசனை 1941 ஜனவரியில் சந்தித்தார். அவருடன் சில காலம் தங்கியிருந்து, அவரது கவிதைகளைப் படியெடுத்தல், அச்சுப் பணி, நூல் வெளியீடு போன்றவற்றில் உறுதுணையாக இருந்தார்.

‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1944-ல் வசனம் எழுதினார். ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்பது போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

ALSO READ  IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது பல சிறுகதைகள் எழுதினார். ‘சிவாஜி’ இதழில் கவிதைகள் எழுதினார். இது பின்னர் கவிதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.

முதல் நூலான ‘சாவின் முத்தம்’ 1946-ல் வெளிவந்தது. 1955-ல் ‘காவியம்’ என்ற வார இதழைத் தொடங்கினார். ‘இலக்கியம்’, ‘ஊர்வலம்’, ‘விண்மீன்’, ‘சுரதா’ என பல கவிதை இதழ்களை வெளியிட்டார். நடிகைகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் ஆனந்த விகடன் இதழில் 1971-ல் வெளிவந்த இவரது கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கியவர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்குகளை தலைமையேற்று நடத்தியவர். வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் என புதுமையான கவியரங்குகளை நடத்தி இளைஞர்களிடம் கவிதை ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

ALSO READ  கையடக்க CPU-ஐ கண்டுபிடித்த 9ம் வகுப்பு மாணவன் - தமிழக முதல்வர் பாராட்டு

யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர். இவரது கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மருதுபாண்டியர் உள்ளிட்ட வரலாற்று நாயகர்கள் குறித்த அரிய தகவல்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார். பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றவர். மலேசியாவில் 1987-ல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இவரது தமிழ்த் தொண்டை கவுரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய பெருமைக்கு உரியவர். கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ‘உவமைக் கவிஞர்’ சுரதா 85-வது வயதில் (2006) மறைந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் .

Admin

உரிமைப் போராளி மேதா பட்கர் பிறந்த தினம்

News Editor

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar