இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதச் சார்பின்மை கோட்பாடு மற்றும் மதநல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ திருத்தச் சட்டமானது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். மதரீதியாக அகதிகளை இந்த சட்டம் பாகுபடுத்திப் பார்க்கிறது. குடியுரிமைபெற மதம் அடிப்படை அல்ல. மதத்தினை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டுவர முடியாது.
குடியுரிமை திருத்த சட்டம் அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், அவர்களை மத ரீதியாகவும், எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும், மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.கடந்த மாதம் 29ம் தேதி ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்