கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (செப்.13) நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவிப்பை வெளியிட்டு ஸ்டாலின் கூறியதாவது,
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒருமாத காலமாக 51 விதமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.