இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .
இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் அக்ஷய்குமார் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு கவுதம் கம்பீர் நன்றி தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்… “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது ரூ. 25 கோடி நிதியை நிவாரணமாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.