பெங்களூரு,
கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவர் தென்னிந்திய க்ரஷ் என்று அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவை காண ரசிகர் ஒருவர் 900கிமீ பயணம் செய்த சம்பவம் குறித்து ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
சுமார் 900 கி.மீ பயணம் மேற்கொண்டு ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்ற அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த விஷயம் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் அந்த ரசிகரிடம், வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில்,
“என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.
எனினும், நிச்சயம் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.