நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இந்த ஆண்டு என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களில் நடித்தார். கலவையான விமர்சனங்கள் பெற்ற இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் இயக்குநர் சுதா கங்கொரா இயக்கும் “சூரரை போற்று” படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர்கள் விஜய்யிடம், சூர்யாவிடமும் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இன்றைய தினம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “அசுரன் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவும் வெற்றிமாறனும் முதல்முறையாக இணையும் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்திருந்தார்”. இந்த படம் நடிகர் சூர்யாவின் நடிப்பிற்கு மாபெரும் விருந்தாக அமையும் சூர்யா ரசிகர்கள் என இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.