நடிகர் சிலம்பரசனுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை உண்டானது.
இதேபோல சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிம்புவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.
இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக பெப்சி அறிவித்தது.
இதனிடையே, இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலம்பரசனின் தாயார் உஷா, மகனின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்துள்ளது.
திரைப்பட படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.