உலகளவில் திரைப்படத்துறையில் சிறந்த கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது சினிமா கலைஞர்களின் உயரிய விருதாகக் கருதப்படுகிறது, மேலும் விருது பெறுபவர்கள் ஒரு கவுருவமாகவும் கருதுகின்றனர்.
ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆண்டிற்கான 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் 93 வது ஆஸ்கர் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சமீபத்தில் மரணமடைந்த முக்கியமான திரைத்துறை பிரபலங்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த வருடம் புற்றுநோயால் காலமான இந்திய நடிகர் இர்பான் கானுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இர்பான் கான் இந்திய சினிமாவில் மட்டுமின்றி, ‘ஸ்பைடர்மேன்’, ‘ஜுராசிக் வேர்ல்டு’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.