புதுடெல்லி
டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவசமாக ரயில் நடைமேடை டிக்கெட் (பிளாட்பார்ம் டிக்கெட்) வழங்கும் புதுமையான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ‘ஆரோக்கியமான இந்தியா’ (Fit India) என்ற திட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் இந்த புதிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் தோப்புக்கரணம் அதாவது உட்கார்ந்து எழுந்தால் (squats) இலவசமாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இலவச டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக, 30 முறை உட்கார்ந்து எழுந்தால் சென்சார் மூலம் உணரும் இயந்திரம், இலவச நடைமேடை டிக்கெட்டை வழங்கும். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல், பயணிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு ‘தாவாய் தோஸ்த் (Dawai Dost) என்ற பெயரில் ரயில் நிலையங்களில் பொது மருந்தகங்கள் (Generic Medical stores) தொடங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், ரயில் பயணிகள் தங்களுக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.தற்போது, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் 10 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆண்டுக்குள் இவற்றின் எண்ணிக்கையை 100 ஆகவும்; அடுத்த 4 ஆண்டுகளில் ஆயிரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியது.
இது மட்டுமின்றி, 3டி மசாஜ் ரோலர்ஸ் மூலமாக மசாஜ் அளிக்கும் வகையில் ரோபோகியூரா மசாஜ் நாற்காலியும் அமைக்கப்பட்டுள்ளது.