பாட்டியாலா:-
கொரோனா எனும் கொடிய அரக்கனை எதிர்த்து உலகமே போராடி வருகிறது. மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்த நோயை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தூய்மைப் பணியாளர்கள் இனி நோய் வராமல் இருப்பதற்கு போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு, ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையிட்டும், மலர் தூவியும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் நாபா என்ற பகுதியில் வசிப்பவர்கள் செய்த செயல், அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அப்பகுதியில், துப்புறவு பணியை செய்யும் தூய்மை பணியாளருக்கு மாலை அணிவித்தும், வீட்டின் மாடியிலிருந்து அவர்கள் மீது மலர் தூவியும், கைகளை தட்டியும் பாராட்டு தெரிவித்தனர்.
அதில் ஒருவர் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அவருக்கு அணிவித்தார்.
இதனை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கொடிய கொரோனா இந்தியாவிலிருந்து விரட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என காலம் பார்க்காமல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த ஊரடங்கு காலத்தில் நாம் வீட்டிற்குள் இருப்பதே அவர்களுக்கு நாம் தரும் ஒத்துழைப்பு.