இந்தியா தற்போது கொரோனா 2-வது அலையின் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துவருகிறது.
ஆனால் மறுபக்கம் 3-வது அலை எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கலாம் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள வேலையில், மக்கள் வெளியில் செல்லும்போது தனிமனித இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தின் மணாலி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், பல்வேறு நகரங்களின் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல் கொரோனா பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் கூட்டமாக கூடும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.