சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாக்களிக்க உரிமை உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சாத், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அதனால், காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக ரஜினி பாட்டீல் அறிவிக்கப்பட்டார். இவர், ஏற்கனவே மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினராகவும், தற்போது ஜம்மு – காஷ்மீரின் காங்கிரஸ் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த போது, சபாநாயகரை அவதூறாக பேசி தாக்க முயன்றதால், 12 பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் இந்தத் தேர்தலில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பா.ஜ.க., – எம்.எல்.ஏ.,க்கள் வாக்களிக்கும் உரிமை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
சட்ட விதிகள் ஆராயப்பட்டு, நீண்ட பரிசீலனைக்கு பின்னர், சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், மஹாராஷ்டிரா சட்டப் பேரவை செயலகத்திற்கு வெளியே சஸ்பெண்ட் 12 எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனி வாக்குச்சாவடி அமைக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.