டெல்லி:-
மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உளவுபார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
THE WIRE, Guardian, Washington Post உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது.
இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் என இந்தியர்கள் 300 பேர் உளவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாகThe Wire, தி ஹிந்து, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்களது செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு,
கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இது அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் புகார் சுமத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி கூறவேண்டும் எனவும் தெரிவித்தார். ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கினால் நல்லது; இல்லாவிடில் வாட்டர்கேட் ஊழல்போல் தலைவலிதான் என கூறினார்.