புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியில் ஆட்சி அமைத்து உள்ளது. முதல்வராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவியேற்று கொண்டார். 3 அமைச்சர் பதவியை பாஜக கேட்பதால், ரங்கசாமிக்கும் பாஜக மேலிட தலைவருக்கும் பனி போர் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமைச்சரவை பட்டியலை ரங்கசாமி பரிந்துரை செய்யவில்லை. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் தற்காலிக சபாநாயகராக என் ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தேர்வு செய்யபட்டுள்ளார். இதற்கான கடிதம் ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி லட்சுமி நாராயணனுக்கு, ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் 30 பேருக்கும் லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.