போபால்:-
குழந்தை வரம் வேண்டி மத்திய பிரதேசத்தில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி கொடுத்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பண்டு மதுரியா – மம்தா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் குழந்தை வேண்டிப் பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் பில்லி சூனியம் வைக்கும் கிர்வார் யாதவ் என்ற சாமியாரை அந்த தம்பதிகள் சந்தித்துள்ளனர். அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மம்தா தனது தங்கை மீரா மற்றும் தங்கையின் காதலன் நீரஜ் ஆகியோரிடம் இந்த நரபலி விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து நீரஜ்தான் பாலியல் தொழிலாளி ஒருவரை நரபலி கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பான பாலிவுட் பட காட்சியைக் காண்பித்து அதுபோலவே செயலிலும் இறங்கியிருக்கிறார்கள்.
அதன்படி அக்டோபர் 13ஆம் தேதி சராய் சோழா பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை சாதாரணமாக அழைத்து, பின்னர் அவரை நரபலி செய்துள்ளனர். ஆனால் இந்த பூஜை சிறப்பாக நடைபெறவில்லை எனக்கூறி, இன்னொருவரை நரபலி கொடுக்க வேண்டும் என அந்த சாமியார் சொல்லியுள்ளார்.
இதையடுத்து அதே பாணியில் 20ஆம் தேதி இன்னொரு பாலியல் தொழிலாளியை நரபலி கொடுத்துள்ளனர். இதில் இரண்டாவது பெண்ணின் உடல் குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம் கல்லூரி வளாகம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதுதான் இவர்கள் முகம் மற்றும் பைக் நம்பர் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் நரபலி குறித்த உண்மையை தெரிவித்துள்ளனர். இதையடுத்து பண்டு – மம்தா, மம்தாவின் தங்கை மீரா மற்றும் தங்கையின் காதலன் நீரஜ், சாமியார் கிர்வார் யாதவ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.