மழைக்காலத்தில் நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக பிளீச்சிங் பவுடர் அடிப்பது, கழிவுநீரை வெளியேற்றுவது, குப்பைகளை அகற்றுவது, சாலைகள் முழுவதும் குளோரின் பவுடர் தெளிப்பது, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை அளித்த தமிழகத்தில் இன்றைய தினம் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள், சுவாசப்பிரச்சினைகள், சளி, காய்ச்சல், வைரஸ், பூஞ்சை பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சார்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த நடமாடும் மருத்துவ சேவையானது இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,500 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.