இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடை உரிமையாளர்கள் விதவிதமான விளம்பரங்களை செய்கிறார்கள்.
அதில் சில விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் கேரளாவில் மின்னணு பொருட்கள் விற்பனை கடையில் விநோதமான விளம்பரம் செய்யப்பட்டது.
அதாவது, “தங்கள் கடையில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளருக்கு 24 மணி நேரத்திற்குள் கொரோனா தொற்று உறுதியானால், அவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும்” என விளம்பரம் செய்தது.
சர்ச்சைக்குரிய விளம்பரம் வைரலானவுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து கோட்டயத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். இந்த சலுகை சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தக் கடையை உடனடியாக மூடி, உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.